Saturday, January 24, 2015

EPISODE-467-TAMIL


EPISODE-467 தமிழ்
அத்தியாயம் -467  MONDAY JAN/ 19/2015
இன்றைய அத்தியாயம் உணர்வுபூர்வமானது,ரசிகர்களை நெகிழவைத்தது ,
அழ வைத்தது ,அத்துடன் இவ்வளவு ,அன்பையும் ,காதலையும் இப்படி
இதயத்துக்குள் பூட்டி வைத்துக் கொண்டு இந்த இரண்டு உள்ளங்களால் ஏன்
இன்னமும்  சொல்ல நினைத்ததைச் சொல்லாமல் இந்த இயக்குனர் இப்படி
ரசிகர்களைத்  தவிக்க வைக்கின்றார் என்று திகைக்கவும் வைத்தது!
அப்படி ஒரு  அற்புதமான நடிப்பு இருவருக்கும்! பாராட்டுக்கள்!
காட்சி -1
அன்புமாமா,விஷ்ணு ,கார்த்திக் மூவரதும் சந்திப்பு மிகவும் அற்புதமாக இருந்தது!
நட்பின் சிறப்பை விஷ்ணுவிலும்,ஒரு அக்கறையுள்ள  அண்ணனுக்குரிய
சிறப்பை அன்புமாமாவிலும்,கைக்கு எட்டியது வாய்க்கெட்டாத நிலையில்
தள்ளப் பட்டுள்ள ஒரு காதலனின்,கணவனின் தவிப்பின் சிறப்பை கார்த்திக்கிலும்
அவர்களது மிகவும்   உணர்ச்சி பூர்வமான நடிப்பில் காணக் கூடியதாக இருந்தது!
இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க வேண்டிய கட்டாயத்துக்காக நடித்திருந்தாலும் வேதனையை வெளிக்காட்டிய போது, கார்த்திக் எல்லோரையும் உருக வைத்தது உண்மையே.
காட்சி-2 
கார்த்திக் ,ராஜியின் நடிப்பு சாதாரணமாகவே அது எந்தக் காட்சியாக இருந்தாலும் அதில் ஒரு சிறப்பு,தனித் தன்மை இருப்பது நமக்குத்   தெரிந்ததே.
ஆனால் இன்று இருவருமே வசன கர்த்தாவின் அருமையான  கதை வசனத்தில்,தமது உள்ளங்களையும் பிழிந்து ,புரிந்தும், புரியாத, விதமாக
புதிராக ஒருவரோடு ஒருவர் பேசிக்  கொள்ளும் விதம் ,மிகவும் சிறப்பாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.
பிரிவு என்பதன் வலியை,தத்ரூபமாக முகபாவனை,கண் அசைவுகள்,குரலின் ஏற்ற இறக்கங்கள்,உடல் அசைவுகள்,முகத்தில் சோகம் தாபம் போன்ற மிக முக்கியமான அம்சங்களை எல்லாம் ஒன்று திரட்டி நமக்குத் தந்த விதம் சிகரத்தைத் தொட்டது என்றே கூறவேண்டும்!
பிரிவது உறுதி அதுவே இருவரதும் எதிர்காலங்களுக்கு நல்லது என்பதை இருவருமே உணர்ந்து ,பரிமாறிக்   கொண்டவர்களாகவும் ஆனால் அதே வேளையில் "யாரை நீங்கள் ஏமாற்றுகிறீர்கள் உங்களையா அல்லது உங்களையும் எங்களையுமா?" என்று அனைத்து ரசிகர்களின் எண்ணத்திலும்
பதிய வைத்தே இவர்களது வசனநடை,நடிப்பு விதம்,உணர்வுகளின்  வெளிப்பாடுகள் என்றே சொல்லலாம்!
காட்சி-3
இருவரதும் சம்பாஷனை தொடர்ந்து உணர்வுபூர்வமாக,மிகவும் நாகரிகமான முறையில் இருவருமே வாக்குவாதமில்லாமல் ,ஒருவரை மதித்து,பேசிய விதம் மிகவும் ஒரு புதிதான நோக்கில் இவ்வளவு நாளும் இவர்களுக்கு இடையே இருந்த ஒரு ஆதங்கத்தை,அங்கலாய்ப்பை,இளக்கியது போன்ற உணர்வை அவர்கள் அடைந்து ஒருவரிடம் இருந்து ஒருவர் விடைபெறச் செய்வதற்காக இயக்குனர் செய்த முயற்சியோ என்று தோன்றியது.
ஆனாலும் உள்ளத்துக்குள் இருக்கின்ற ஒரு தெய்வீக இணைப்பு எந்த நாடகம் ஆடினாலும்,எந்த விதமாகப் பிரிந்தாலும்,எத்தனை நொண்டிச் சாட்டுகளை
முன் வைத்தாலும் அதை எந்தச்  சக்தியும்  அவ்வளவு இலகுவில் அசைக்க முடியாது என்பதை கார்த்திக் நடிகரும்,சுருதி நடிகையும் தமது அற்புதமான நடிப்பால் ஆத்மார்ந்தமான ,உணர்ச்சியைக் கொட்டி எமக்குத் தந்தார்கள் என்பதே முழுக்க முழுக்க உண்மையாகும்.
இந்தத் தொடர் எப்படி தொடர்ந்தாலும் இவர்களது  நடிப்பு தொடருக்கு உயிர் கொடுத்துக்  கொண்டே இருக்குமென்பதில் ஒருவித சந்தேகமுமில்லை!
காட்சி-4
இந்தக் கடைசிக் காட்சியில் .முதல் நாளிரவு முழுவதும்  தூக்கம் கொள்ளாமல் வேலைக்கு வந்த ராஜி சாப்படறையில்   இருந்து கொண்டே தூங்குவதைக் கண்டு கமல் அவளை காரணம் விசாரிக்கின்றான்!
அதற்கு காரணம் அவனுக்கே தெரியு மென்று கூறும் ராஜி அவனிடமே
இனித் தான் கார்த்திக்குடன் தனது வீட்டில் மனைவி என்ற உரிமையுடன்
தங்க முடியாது என்றும் அங்கு தங்கினால் தனக்கு பழைய ஞாபகங்களும்
கார்த்திக்கின் ஞாபகமும் வரும் என்றும் தன்னால்   நிம்மதியாக இருக்க முடியாது என்றும் கமலுக்கு முறை இடுகின்றாள்.
கமல் அவளது அவசர முடிவைக் கேட்டு ,இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்றனவே என்ன அவசரம் என்றும் கேட்டு வைக்கின்றான்.
அதற்கு அவள் அதுவரை பொறுக்க முடியாது  என்பதையும்  ,தான் மிகவும்
உறுதியாக இருக்கின்றேன் என்ற பாவனையுடன்  கமலுக்கு காட்டுவது போலவும் உள்ள முக பாவனையுடன் காட்சியும் அத்தியாயமும் முடிகின்றது.
ஒட்டு மொத்தமாக அருமையான அத்தியாயம்!
மீண்டும் ஆசிகளுடன்!




,

No comments:

Post a Comment